Showing posts with label எண்ணத்துணுக்கு. Show all posts
Showing posts with label எண்ணத்துணுக்கு. Show all posts

காதல் குளத்தில் முதலில் கல்லெறிவது யார்?

காதல் குளத்தில் முதலில் கல்லெறிவது பெண்கள் தான்.

இங்கு காதல்,குளம்,கல்லெறிதல் பற்றியெல்லாம் வித்தியாசமான கருத்துக்கள்,பார்வைக்கோணங்கள் முன்வைக்கப்பட்டன.

கல்லெறிந்தால் குளம் கலங்கும்....
அலைகள் உருவாகும். எறிந்த கல் அப்படியே ஆழத்துக்குப் போய் விடுவதுமுண்டு.அலைகளை உருவாக்கி ரசிப்பதுமுண்டு. கற்கள் அளவு ,வீச்சு ,நிறை இவற்றினால் ஒன்றுக்கொன்று வேறுபடும்.
குளத்தின் கொள்ளளவுக்கும் அதிர்வுக்கும் இடையில் கூட தொடர்பிருக்கிறது. சரி சுற்றி வளைத்து மூக்கு தொடாமல் விடயத்துக்கு வருகிறேன்.

`பெண் நாணமுடையவள் அவள் எப்படி காதல் குளத்தில் கல்லெறிவாள்` என்று உள்ளத்தில் கேள்வி, தூண்டில் முள்ளாய் தைக்கிறதா? பெண்ணின் நாணமே ஒரு கல் தான் என்பது என் கருத்து. இறைவன் பெண்ணைப் படைக்கும் போதே இத்தகைய இனிய கற்களை வைத்திருக்கிறான்.

காதல் என்றால் கல்யாணத்துக்கு முன் வரும் ஒன்று என்றே கருதி வருகிறோம்.திருமணத்துக்குப் பின்னும் அன்பும் இனிமையும் தொடருமானால் அது தான் காதல். தன் இனிய துணைவனின் காதல் குளத்தில் பெண் எறியும் கற்களைப் பாருங்கள். துடுக்குத்தனம்,மென்மையான பேச்சு,ஊடல், அச்சம்,மடம்,நாணம்,பயிர்ப்பு இவையெல்லாம் என்ன?

இவற்றால் குளம் அதிராதா? பெண்ணின் கோபமும் அலட்சியமும் கூட ஆண் மனதில் அலையாக மாறி அலைக்களிப்பதை நாம் கண்டதில்லையா? ஒன்று...... பெண்கள் வேண்டுமென்றே கல்லெறிவதும் உண்டு. தங்களை அறியாமலே கல்லெறிவதும் நடக்கிறது. அவளே ஒரு கல்லாயும் சமயங்களில் இருப்பதுண்டு. பெண்ணின் பார்வை -அது தான் பாராங்கல். நிலவின் குளிர்ச்சியோடு வரும் அந்த பார்வை ஆண்மனதில் ஆயிரம் மின்னல் அதிர்வு தருகிறது. பார்வை தாழ்த்தி போனாலும் உடலின் அசைவுகளும் சங்கீதமான குரலும் காதல் குளத்தில் கல் வீசிச்செல்கின்றன.

பெண் தன் உடல் மறைத்து உடையணிந்தாலும், அந்நிய ஆணுக்கும் பெண்ணுக்கும் பார்வை தாழ்த்துமாறு சொல்லுகிறது இஸ்லாம்.இதன் பின்னணியில் பெண்,அவள் அமைதியாய் ஆர்ப்பாட்டமில்லாமல் இருந்தால் கூட அவளே ஒரு கல்லாய் இருக்கிறாளோ என்று எண்ணத்தோன்றுகிறது.எனவே கல்லெறிவது ஒன்றும் பெண்ணின் தவறு அல்ல அது அவளின் படைப்பின் நேர்த்தி.பெண் நினைத்தால் எறியும் கல்லின் வீச்சத்தைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம்...
அவ்வளவு தான்.

இங்கு நான் ஒன்றை சொல்லியே ஆக வேண்டும். நான் படித்தது புகழ் பெற்ற முஸ்லிம் கலவன் பாடசாலை ஒன்றில்.
வகுப்புக்கள் ஆண்கள்,பெண்களுக்கு வேறு வேறாக இருக்கும்.ஒவ்வொரு நாளும் சலவை செய்து அழுத்திய வெள்ளுடைகளோடு தான் மேல்வகுப்பு மாணவிகள் வருவார்கள்.ஆனால் ஆண்களோடு பேசுவது மிகக் குறைவாக அல்லது இல்லை எனலாம்.

அப்படியென்றால் ஏன் உடையிலும் நடையிலும் அத்தனை கரிசனை? கொழும்பில் சர்வதேச பெண்கள் பாடசாலை ஒன்றில் ஒரு வருடம் தங்கிப் படித்த போது விடை கிடைத்தது.
அங்கு நான் அழுத்திய சீருடையோடு அழகாக செல்வேன். ஆனால் என் சக தோழிகள் எந்தக் கவனமும் இல்லாமல் ஏனோ தானோ என்று வருவார்கள்.இத்தனைக்கும் அங்கு படிக்கும் மாணவிகளில் பெரும்பான்மையினர் நாகரீகம் துள்ளி விளையாடும் மேல்தட்டு வர்க்கத்தினர்.
வகுப்பு முடிந்ததும் யாரும் பொது பஸ்களில் செல்வதில்லை.சொந்த வாகனம் வரும்.அங்கு ஒரு ஆண் ஆசிரியரோ,கடைநிலை ஊழியரோ கூட இல்லை.எனவே அலங்காரத்தைப் பற்றி யாரும் அலட்டிக்கொள்வதுமில்லை.
இதே தோழிகள் பாடசாலைக்கு வெளியே அலங்காரமில்லாமல் செல்வதில்லை.பெண்கள் கவர்ச்சியான உடை அணிவதன் நோக்கங்களில் ஆண்களின் கவன ஈர்ப்பும் முக்கிய இடம் பெறுகிறது.எனவே இங்கு எது கல் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டாலே விவாதம் முடிவுக்கு வந்து விடும்.

காதல் குளத்தில் எறியப்படும் கல்லை விட எறியப்பட்டதால் ஏற்பட்ட அதிர்வலைகளே கண்ணுக்குப் புலப்படும்.பெணகள் கல்லை எறிந்து விட்டு ஒன்றும் அறியாதவர்கள் போல் இருப்பார்கள்;ஆண்களின் உசுப்ப பட்ட மனக்குளத்தின் அதிர்வலைகளே எல்லோருடைய வெற்றுக் கண்களுக்கும் புலப்படும்.உடனே `காதல் குளத்தில் கல்லெறிபவர்கள் ஆண்களே ` என்று முடிவுக்கு வந்து விடுவோம்.

பறவைகளிலும் மிருகங்களிலும் ஆண்வர்க்கத்துக்குத் தான் அதிக கவர்ச்சியும்,காதல் குளம் வீசக் கற்களும் இறைவன் கொடுத்திருக்கிறான்.இதனை யாரும் மறுக்க முடியாது.ஆனால் மனித வர்க்கத்தில் இதற்கு நேரெதிராய் பெண்ணினத்துக்கே அசாதாரண ஈர்ப்புச்சக்தியும் உளம் கலக்கும் கற்களும் தரப்பட்டிருக்கின்றன.இது அறிவியல் உண்மை.

தலை நிமிர்ந்து யாரையும் பார்க்காத பெண்ணால் குளம் அதிர்ந்த ஆண் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். என் எதிரணித்தோழர்கள் தலைப்பைப் புரிவதில் தவறு விட்டிருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.
வரலாறு நெடுகிலும் காதல் குளத்தில் கல்லெறிந்த பெண்களையும் அவர்களால் குளம் அதிர்ந்த ஆண்களையும் நிறையவே காணலாம்.

கற்கள் அதிர்வதில்லை.
கற்பட்ட குளமே அதிர்கிறது.
பெண் காதலை முதலில் சொல்வதில்லை,ஆனால் அவளது அங்க அசைவுகள் அனைத்தும் இதை சொல்லாமல் சொல்கின்றன.இனி காதல் குளம் கலங்குகின்றது. ஆண் காதலை சொற்களால் தெளிவாக வெளிப்படுத்துகிறான்.
குளத்தில் எறியப்பட்ட கல் அமைதி காக்கிறது.

அன்புடன் சுடர் என்னிடம் - 5

5. நிழல்கள் நிஜமாவதில்லை, கனவுகள் நனவாவதில்லை - உண்மையா ? மிக அழகான கேள்வி.என் சிந்தனைவேர்களில் தாகமாய் வந்தமர்ந்த வினா..
நிழல்கள் நிஜமாவதில்லை, கனவுகள் நனவாவதில்லை - இந்த கூற்றின் முரண் தான் என் நம்பிக்கை.

நிழல்கள் தான் நிஜமாகின்றன , கனவுகள் தான் நனவாகின்றன – இது உண்மை!அனுபவித்துச் சுவைத்த உண்மை .எதை நாம் அதிகம் நினைக்கிறோமோ,எதை நாம் அதிகம் கனவு காண்கிறோமோஅதை நாம் அடைகிறோம்………

என் இதயத்தில் இடம் பிடித்திருக்கும் ஒருவர்….
அவர் அறிமுகம் தேவையில்லை.வசதியாயிருந்து பின் வறுமையின் அடிமட்டத்துக்கே போன ஒரு குடும்பத்தின் வாரிசு………….
அவருக்கு படிப்பில் அபாரத் திறமை……
காலில் செருப்பில்லாது,தேய்ந்த ஒரே சீருடையுடன் பள்ளிக்கு போனவர்.மீதி நேரத்தில் கடையில் எடுபிடி வேலையிலிருந்து தெருவில் கூவி விற்பது வரை ஓடாய்த் தேய்ந்தவர்……….
வாழ்க்கை பற்றி இரவின் தனிமையிலே யோசிப்பாராம் …….`
நானும் ஒரு நாள் வாழ்வில் உயர்வேன்.என் குடும்பம் கெளரவமாய் வாழும்`என்ற கனவு……
இன்று அவர்ஒரு அருமையான குடும்பம்,மிக கெளரவமான வாழ்க்கை,சமூக அங்கீகாரத்தோடு வாழ்கிறார்.இறைவனுக்கே புகழ் அனைத்தும்இப்படி நிறைய வாழும் உதாரணங்களைக் கண்டிருக்கிறேன்.கேட்டிருக்கின்றேன்.உளவியலில் மனதை மூன்றாகப் பிரிப்பார்கள்

1.வெளிமனம்
2.உள் மனம்
3.ஆழ் மனம்
இதில் நாம் வெளிமனதையும் உள்மனதையும் தான் அறிகிறோம்.மிகவும் சக்தி மிக்க ஆழ்மனதின் ஆற்றலை குறைவாகவே தெரிந்து வைத்திருக்கிறோம்.ஆழ்மனது ஒன்றை அழுத்தமாக விரும்பி விட்டால் அதை அடைந்தே தீரும்.
அடிக்கடி மனக்கண்களால் கனவு காண்பது ஆழ்மனதின் அடியாழத்தில் தங்குகிறது……..எனவே நிழல்கள் நிஜமாகின்றன……
கனவு காண்பதில் நான் கஞ்சத்தனம் காட்டுவதில்லை எப்போதுமே!!!

சின்ன வயதில் என் அறையில் மாட்டியிருந்த படத்தில் இருந்த`keep on believing ……….Your Dreams can come true` என்ற வாசகத்தை எப்போதுமே என் இதயத்தில் பதித்து வைத்திருக்கின்றேன்……
கனவுகள் ஒரு நாள் நனவாகும்……………..
நிழல்கள் அனைத்தும் நிஜமாகும்………………
வானம் எனக்காய் இறங்கி வரும்………………
நிலவும் பனித்துளி பரிசு தரும்……………………..

அன்புடன் சுடர் என்னிடம் - 4

4. உங்களுக்கு யாரைப் பார்த்தால் கோபம் வரும் ? கோபப்பட்ட சிலஅனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

கோபம் -காயப்பட்ட உள்ளத்தின் கொந்தளிப்பு……
சீண்டப்பட்ட பாம்பின் உஷ்ணக்காற்று……..
கோபம் வரக்கூடாத இடங்களுண்டு……………..
கோபம் வந்தாக வேண்டிய இடங்களுமுண்டு…………..
வரக்கூடாத இடங்களில் வந்தும் வரவேண்டிய இடங்களில் வராமலும் இந்த கோபம் என்ன பாடு படுத்துகிறது.
எனக்கும் சின்ன சின்ன கோபங்கள் வருவதுண்டு.
அன்பானவர்களின் புறக்கணிப்பு கோபம் கலந்த அழுகையை கொண்டு வந்து நிறுத்தி விடும்……
உலகமே எதிராய் நின்றாலும் கலங்காத உறுதியுண்டு.
இனியவர்களின் ஒரே அலட்சியப் பார்வை போதும் உயிரை வலிக்கச் செய்ய………….
எனக்கு வலிமை குறைந்தவர்களை வலியவர்கள் காலில் போட்டுமிதிப்பது
கண்டால் கோபம் எல்லை மீறும்.
எங்களூரில் இருக்கும் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவரை இளைஞர்கள் கேலி செய்து சிரிப்பதைக் கண்டு இரத்தம் கொதித்திருக்கிறேன்.
படித்தவர்கள்(?) தங்களை விட தகுதிகள் குறைந்தவர்களை ,மட்டம் தட்டிப் பேசுவதை அல்லது அவமதிப்பதை கண்டால் என்னுள் சினம் பிறக்கும்.
கோபத்தில் இரண்டு வகையிருக்கிறது.

நீர்————————-மணல்
நீர் சூடாக நேரம் எடுக்கும்……………
ஆனால் சூடாகி விட்டால் இலேசில் ஆறாது.
மணல் அவசரமாய் சூடாகி விடும்………
அதே அவசரமாய் ஆறியும் விடும்………
`நான் நீரா ? மணலா ?தெரியவில்லை.`

ஆனால் ஒன்று
அநேகமாய் என் கோபம் கண்ணீரில் தான் கடைசியாய் வந்து தணியும்.

அன்புடன் சுடர் என்னிடம்-3

3. மகள், மனைவி, தாய், தோழி – என்ற வெவ்வேறு நிலைகளில் பெண்மையின் உன்னதம் எந்த நிலையில் உயர்வையும் மன நிம்மதியையும் அடைகிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ?

உண்மையில் என்னை மிகவும் யோசிக்க வைத்தது இந்த வினா…….. பெண்மையின் உன்னதம் உயர்வும் நிம்மதியும் ,இந்த நிலைகளை அடைவதில் அல்ல இந்த நிலைகளில் ஒரு பெண்ணின் மனோபாவம் பொறுத்தே நிர்ணயிக்கப் படுகிறது என்பது என் அபிப்பிராயம்.
சுயநலமற்ற நேசம்……
உள்ளார்ந்த அன்பு……..
தலைகோதி நெஞ்சின் சிடுக்கெடுக்கும் விரல் நுனிகள்…. இதயம் உடைந்து விம்மும் வேளைகளில் ஆறுதல் பனித் துளிகள் ……
பிழை செய்தால் அன்பு கலந்த கண்டிப்பு…..
எப்போதும் எரிக்காத பார்வை…………
இவை ஒரு பெண்ணின் மனவெளியில் உலவும் வரை அவள் பெண்மையின் உன்னதம் வான் தொடும்.
நிம்மதியின் ஊற்று கரை உடைக்கும். `ஆண் பெண் சமத்துவம்`இன்று நிறமிழந்து பெண் தன் மணமிழந்து நிற்கிறாள்…
கூட்டுக்கும் கூண்டுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொண்டாலே போதும்……………………

பெண்ணின் மென்மை கலந்த மேன்மை உயிர் சிலிர்க்கும்!
பொத்தி வளர்க்கும் ஒரு மகளின் அலை புரளும் பாசம்……….
உயிர் வேரில் ஒவியமாய் சிலிர்க்கும் மனைவியின் மென்காதல்…………
மனம் வலிக்கும் பொழுதுகளில் தலைதடவி தாலாட்டும் தாயின் நேசம்…….
தொடாத தூரத்திலிருந்தாலும் சுவாசத்துடிப்பறிந்த தோழியின் நட்பு……… ஒவ்வொன்றுமே பெண்மையின் உன்னதம் தான்………………..
பெண்ணின் மனோபாவமும்,அன்பின் ஆளுகையும் தான் அதனைத் தீர்மானிக்கும்.

அன்புடன் சுடர் என்னிடம்-2

2. நமது வாழ்க்கை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்று என்று விதியை நீங்கள்நம்புகிறீர்களா இல்லை நமது உழைப்பும் முயற்சியும் மட்டுமே நம்எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது என்று நினைக்கிறீர்களா ?




இறைவன் ஒருவன் இருப்பதை நான் எந்தளவுக்கு உயிரில் சுமந்திருக்கிறேனோ அந்தளவுக்கு விதியையும் நான் விசுவாசிக்கிறேன்.
விதி என்பது என்ன?
இறைவனின் நாட்டமும் மனிதனின் முயற்சியும் சந்திக்கும் தொடுபுள்ளி .
விதிக்கு ஒவ்வொரு விதமான விளக்கங்கள் இருந்தாலும் விதியைக் காரணம் காட்டி உழைப்பையும் உற்சாகத்தையும் இழப்பதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாது.
இறைவனுடைய நாட்டம் ஏற்கனவே எழுதப்பட்டு விட்டது உண்மை தான்:அந்த ஏட்டில் இருப்பது என்ன என்பது எமக்குத்தெரியாது……………
எனவே
உழைக்கும் போது நம் கை மட்டுமே நமக்குப் பலன் தரும் என்பது போல வியர்வை சிந்த வேண்டும்……….
மனதில் உழைப்பைப் பற்றி நினைக்கும் போது நம் வெற்றிக்கு இறைவன் நாட்டமேயன்றி வேறு காரணம் இல்லை என்ற பணிவும் சார்தலும் வேண்டும்.
உளம் தளராத உறுதியின் இரகசியம் இது என்பது என் கருத்து.
இன்னுமொன்று………
நேற்று நடந்ததை நம் அறிவு விளங்கி வைக்கும்.
நாளை நடப்பது எமது அறிவுக்கு அப்பாற்பட்டது.
ஆனால் இறைவன் நேற்றையும் நாளையையும் ஒரே போல் அறிகிறான்.
இது தான் விதியின் அடிப்படை.
நாளை நடப்பதை அறிந்து கொள்ள சோதிடர் தேடி அலைவதிலும்
தினசரிப் பத்திரிகையில் ராசிபலன் பார்ப்பதிலும் எனக்கு உடன்பாடில்லை.
நாளை நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கைப் பூவுடன் நடப்போம்.

அன்புடன் சுடர் என்னிடம் 1

அன்பு சகோதரி ஹயா..
இதோ உங்களுக்கான ஐந்து கேள்விகள்.
1. பெண்ணாகப் பிறந்துவிட்டோமே என்று இந்த சமூகம் என்றாவது உங்களை நினைக்கவைத்திருக்கிறதா ?

அருமையான பதில்களால் எங்கள் உளம் தொட்டு பின் சிந்தனைச் சிறகுகளை அகலவிரித்துப் பறக்க வானம் தரும் உங்கள் கேள்விகள் என் கதவு தட்டுகின்றன. நன்றிகள் சகோதரர் ஷாஜஹானுக்கு!!!
இறைவனுக்கே புகழனைத்தும்.
பெண் குழந்தைகளை விரும்பி வளர்க்கும் ஒரு பெற்றோருக்கு நான் பிறந்தது என் பாக்கியம். சூழலில் வேறு பெண்குழந்தைகளுக்கு பாரபட்சம் காட்டப்படுவதைக் கண்டு கொண்டே நான் வளர்ந்தேன். எனக்கு சகோதரர்கள் இல்லை: சகோதரிகள் மாத்திரம் தான். எப்போதாவது ` நான் ஏன் பெண்ணாய்ப் பிறந்தேன்`என்ற ஆதங்கம் என் உள்ளம் குடைந்ததில்லை. ஒரு ஆணைப் போல் ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டதுமில்லை. இந்த விடயத்தில் என் பெற்றோரின் பரந்த மனோபாவத்திற்கு நான் நன்றிசொல்லியே ஆக வேண்டும்
ஒரு விடயம் சொல்லியாக வேண்டும். 1400 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்மையின் குளிர்ச்சிக்கு தனிதுவமான இடமும் உரிமையும் வழங்கிய உயர் மார்க்கத்தின் வாரிசான பெண் நான். இறைவனுக்கு மட்டுமே அடிபணிவதன் இன்பத்தின் பின்னால் அத்தனை தளைகளும் அடிமைத்தனங்களும் அறுந்து விழுகின்றன. பெண்ணாய்ப் பிறந்ததற்காய் உளம் சிலிர்த்த கணங்களே அதிகம்.
கொள்கையைச் சரியாகப் புரியாமல் குருட்டு வெளிச்சத்தில் குளிர்காயும் சமூகத்தின் ஒரு பகுதியால் நான் காயப்பட்ட உண்மையை நான் மறுக்கவில்லை. பெண் என்பதற்காய் என் பின்னால் அறைந்து சாத்தப்பட்ட கதவுகளின் சத்தம் என்காதுகளில் இன்னுமே ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.
பெண் என்பதால் என் எழுத்தும் வாழ்க்கையும் இணைத்துப் பார்க்கப் படும் துக்கத்தை அனுபவித்திருக்கிறேன்……….
அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். சில கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்ல முடியாத வேதனை உள்ளுக்குள் ஓயாமல் தவிக்கிறது.
தன் உள்ளத்தின் ஓசைகளைத் தெளிவாக முன்வைக்கும் பெண் ,அமைதியும் மென்மையும் கொண்ட குடும்ப விளக்காக இருக்க பொருத்தமற்றவள் என்ற மனோபாவம் கண்டு வெதும்பியிருக்கிறேன்.
பெண்ணாய் ஏன் பிறந்தோமோ என்று உடைந்து போனதில்லை
இஸ்லாமிய வரலாற்றின் சாதனை மகளிரை, அறிவின் ஊற்று அன்னை ஆயிஷாவை, வீரத்தாய்உம்மு அமாராவை, எகிப்தியப் போராளி சைனப் கஸ்ஸாலியை பாராட்டும் சமூகம்,அதே பணியை முன்னெடுக்கும் தன் நிகழ்காலச் சகோதரியை வேற்றுக்கண் கொண்டு பார்க்கும் அதிர்வு எனக்குள் பதிவாகியிருக்கிறது.
அன்புடன் போட்டிக்கு அனுப்பிய என் இயல் கவிதை என் மன உணர்வுகளின்கண்ணாடி.
முதிர்ந்த இலைகள்

நிலா காயும்
முன்னிரவில்….
முறிந்த படலையில்
ஏகாந்தமாய் தேம்பும்
என் இதயம்!!!

என்
ஆன்மாவுக்குள் பீறிட்ட
சின்ன நீரூற்றின்
பிரவாகம்….
கரை உடைக்கிறது!!!

தாகம்!தாகம்!

முளையாய்அரும்ப
முன்னரே
வலிக்க வலிக்க
விழுது பாய்ச்சிய
வேகமிது!!!

தூரத்தில் அசையும்
நதி மேகங்களில்…
என் கனவுகள்!!!

ஒளிர்ந்து
இதயம் நனைக்கும்
விடி வெள்ளியில்
என் இலட்சியம்!!!

இருளின் மடியிலும்
நிலவின் பிடியிலும்
நிற்காமல் ஓடும்
வாழ்க்கை….ஒற்றையடிப்பாதையாய்…..

ஒழுங்கையோ
ஒற்றையடி!
முள்பட்டே
கிழிந்த
பாதங்கள்!

ரணங்களின் அந்தரங்கத்தில்
அடிக்கடி
தற்கொலை செய்யும்
இதயம்!

ஆண் அல்ல
என்பதனால்
அறைந்து சாத்தப்பட்டகதவுகள்!!!

திறமை வெள்ளத்தின்
வீச்சைமூச்சடக்கி……
துளித்துளியாய்…
தேவைகளில் பெய்!!

பிரார்த்தனை விழிகளின்
ஈரத்தில்…
அழுத கண்ணீர்
விம்மும் நடு இரவில்….
ஒரு தாய்ச்சிறகின் கதகதப்பாய்….
என் தொழுகை!!!!

வானம் தொட்டு
விடத்துடிக்கும்
உள்ளமே!!
நில்!!

அழுத்தும் சுமைகள்
சிறகுகளைக் காயப்படுத்தும்!!!

எத்தனை இருந்தும்……………….பெண்ணாய் ஏன் பிறந்தோமோ என்று உடைந்து போனதில்லை.
புகழ் இறைவனுக்கே!!!

புதிதாக சிந்திக்கக் கூடாது!

நேற்றிரவு மின்சாரம் அறுந்து போனது….அடிக்கடி கிண்கிணுக்கும் அலைபேசியை அறையிலேயே வைத்து விட்டு வெளியே வருகிறேன்.லேசாக மழை தூரல்……சட்டென்று இறுகிப் போன முகத்தை ஒரு புன்னகை தொட்டுச்செல்கிறது.
இறைவனைப் புகழ்ந்துகொள்கிறேன்.
இறைவாமாற்றங்களை ஏற்க மறுக்கின்ற குறுகிய மனத்தை எனக்குத் தந்து விடாதே என் மனம் உள்ளுக்குள் இருகரமேந்துகிறது.
புதிதாக ஒன்றை செய்ய முடியாது. சிந்திக்கக் கூட முடியாது.அது சரிவராது…வழமையானபடியே செய்வோமே…இவ்வளவு காலம் இதைத் தானே செய்தோம் இப்படியானவர்களுடன் சேர்ந்து பணியாற்றுவது பெரிய சவால்.

அண்மையில் ஒரு நிகழ்ச்சிக்கான அழைப்புக்கடிததைத் தயாரிக்க நேரிட்டது.
நிறுவனத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதியின் நிகழ்ச்சி. சம்பிரதாயமான அலுவலகக்கடிததிலிருந்து சற்றே மாறுபட்ட ஒரு அமைப்பில் கடிதத்தை வடிவமைத்தோம். கடிதம் அழகாக வந்திருக்கிறது என்ற கருத்தில் பலர் இருக்க அந்தப் பிரிவின் பொறுப்பாளர்கள் சிலர் இப்படி வந்திருக்க தேவையில்லை என்று அபிப்பிராயப்படார்கள். அவர்கள் அதற்கு சொன்ன காரணம் மிகவும் வருத்தத்தைத் தந்தது. எல்லாப் பிரிவுகளின் கடிதங்களும் ஒரே விதமாக இருக்க இந்தப் பிரிவுக்கு மட்டும் என்ன முக்கியத்துவம் வேண்டியிருக்கிறது? வாழ்ந்து கொண்டிருப்பது கணிப்பொறி யுகத்தில்.ஒரு பிரிவின் செயற்பாடுகளின் தரம் அதிகம் என்றால் அதற்கேட்ப மற்றப் பிரிவுகளின் நடவடிக்கைகளின் தரத்தையும் அதிகரிப்பது தானே ஆக்கபூர்வமானது.
இப்படியான மனோநிலைகள்.
ஒரு குற்றச்சாட்டை முன்வைப்பது என்றாலும் அது ஒரு பெரிய சுற்று சுற்றி விட்டுத் தான் சம்பந்தப்பட்டவர் காதுகளுக்கு வரும். ஏனோ தெரியவில்லை. சிலருக்கு சொல்வதை முகத்துக்கு முன் சொல்லத் தைரியமில்லை.
மனசில் எழுந்த கேள்விகளுக்கெல்லாம் அந்த தூரத்து நட்சத்திரம் பதில் சொல்லிவிட்டது.
மீண்டும் புதிய உற்சாகத்துடன் வீட்டினுள் நுழைந்தேன்.
தையெல்லாம் தூக்கிப் பிடித்துக்கொண்டிருக்க முடியுமா? ஒரு நிறுவனம் என்றால் பலதரப்பட்டவர்களிருப்பார்கள். இணங்கித் தான் ஆக வேண்டும். அதிலும் வயதில் மூத்தவர்களிடம் சற்று தாழ்ந்து போனால் தான் அவர்களுக்கும் திருப்தி.

என் நிறம்...

பெயர்: சமீலா யூசுப் அலி

இடம்: இலங்கை

கல்வி: MA in Mass Communication and Journalism
(Madurai)
MA in Sociology(Reading) University of Peradeniya.

இலட்சியம்: அமைதியான உள்ளம் அதனூடாக
அமைதியானஉலகம்