5. நிழல்கள் நிஜமாவதில்லை, கனவுகள் நனவாவதில்லை - உண்மையா ? மிக அழகான கேள்வி.என் சிந்தனைவேர்களில் தாகமாய் வந்தமர்ந்த வினா..
நிழல்கள் நிஜமாவதில்லை, கனவுகள் நனவாவதில்லை - இந்த கூற்றின் முரண் தான் என் நம்பிக்கை.
நிழல்கள் தான் நிஜமாகின்றன , கனவுகள் தான் நனவாகின்றன – இது உண்மை!அனுபவித்துச் சுவைத்த உண்மை .எதை நாம் அதிகம் நினைக்கிறோமோ,எதை நாம் அதிகம் கனவு காண்கிறோமோஅதை நாம் அடைகிறோம்………
என் இதயத்தில் இடம் பிடித்திருக்கும் ஒருவர்….
அவர் அறிமுகம் தேவையில்லை.வசதியாயிருந்து பின் வறுமையின் அடிமட்டத்துக்கே போன ஒரு குடும்பத்தின் வாரிசு………….
அவருக்கு படிப்பில் அபாரத் திறமை……
காலில் செருப்பில்லாது,தேய்ந்த ஒரே சீருடையுடன் பள்ளிக்கு போனவர்.மீதி நேரத்தில் கடையில் எடுபிடி வேலையிலிருந்து தெருவில் கூவி விற்பது வரை ஓடாய்த் தேய்ந்தவர்……….
வாழ்க்கை பற்றி இரவின் தனிமையிலே யோசிப்பாராம் …….`
நானும் ஒரு நாள் வாழ்வில் உயர்வேன்.என் குடும்பம் கெளரவமாய் வாழும்`என்ற கனவு……
இன்று அவர்ஒரு அருமையான குடும்பம்,மிக கெளரவமான வாழ்க்கை,சமூக அங்கீகாரத்தோடு வாழ்கிறார்.இறைவனுக்கே புகழ் அனைத்தும்இப்படி நிறைய வாழும் உதாரணங்களைக் கண்டிருக்கிறேன்.கேட்டிருக்கின்றேன்.உளவியலில் மனதை மூன்றாகப் பிரிப்பார்கள்
1.வெளிமனம்
2.உள் மனம்
3.ஆழ் மனம்
இதில் நாம் வெளிமனதையும் உள்மனதையும் தான் அறிகிறோம்.மிகவும் சக்தி மிக்க ஆழ்மனதின் ஆற்றலை குறைவாகவே தெரிந்து வைத்திருக்கிறோம்.ஆழ்மனது ஒன்றை அழுத்தமாக விரும்பி விட்டால் அதை அடைந்தே தீரும்.
அடிக்கடி மனக்கண்களால் கனவு காண்பது ஆழ்மனதின் அடியாழத்தில் தங்குகிறது……..எனவே நிழல்கள் நிஜமாகின்றன……
கனவு காண்பதில் நான் கஞ்சத்தனம் காட்டுவதில்லை எப்போதுமே!!!
சின்ன வயதில் என் அறையில் மாட்டியிருந்த படத்தில் இருந்த`keep on believing ……….Your Dreams can come true` என்ற வாசகத்தை எப்போதுமே என் இதயத்தில் பதித்து வைத்திருக்கின்றேன்……
கனவுகள் ஒரு நாள் நனவாகும்……………..
நிழல்கள் அனைத்தும் நிஜமாகும்………………
வானம் எனக்காய் இறங்கி வரும்………………
நிலவும் பனித்துளி பரிசு தரும்……………………..
அன்புடன் சுடர் என்னிடம் - 5
Labels: அன்புடன் சுடர் , எண்ணத்துணுக்கு
அன்புடன் சுடர் என்னிடம் - 4
4. உங்களுக்கு யாரைப் பார்த்தால் கோபம் வரும் ? கோபப்பட்ட சிலஅனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்.
கோபம் -காயப்பட்ட உள்ளத்தின் கொந்தளிப்பு……
சீண்டப்பட்ட பாம்பின் உஷ்ணக்காற்று……..
கோபம் வரக்கூடாத இடங்களுண்டு……………..
கோபம் வந்தாக வேண்டிய இடங்களுமுண்டு…………..
வரக்கூடாத இடங்களில் வந்தும் வரவேண்டிய இடங்களில் வராமலும் இந்த கோபம் என்ன பாடு படுத்துகிறது.
எனக்கும் சின்ன சின்ன கோபங்கள் வருவதுண்டு.
அன்பானவர்களின் புறக்கணிப்பு கோபம் கலந்த அழுகையை கொண்டு வந்து நிறுத்தி விடும்……
உலகமே எதிராய் நின்றாலும் கலங்காத உறுதியுண்டு.
இனியவர்களின் ஒரே அலட்சியப் பார்வை போதும் உயிரை வலிக்கச் செய்ய………….
எனக்கு வலிமை குறைந்தவர்களை வலியவர்கள் காலில் போட்டுமிதிப்பது
கண்டால் கோபம் எல்லை மீறும்.
எங்களூரில் இருக்கும் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவரை இளைஞர்கள் கேலி செய்து சிரிப்பதைக் கண்டு இரத்தம் கொதித்திருக்கிறேன்.
படித்தவர்கள்(?) தங்களை விட தகுதிகள் குறைந்தவர்களை ,மட்டம் தட்டிப் பேசுவதை அல்லது அவமதிப்பதை கண்டால் என்னுள் சினம் பிறக்கும்.
கோபத்தில் இரண்டு வகையிருக்கிறது.
நீர்————————-மணல்
நீர் சூடாக நேரம் எடுக்கும்……………
ஆனால் சூடாகி விட்டால் இலேசில் ஆறாது.
மணல் அவசரமாய் சூடாகி விடும்………
அதே அவசரமாய் ஆறியும் விடும்………
`நான் நீரா ? மணலா ?தெரியவில்லை.`
ஆனால் ஒன்று
அநேகமாய் என் கோபம் கண்ணீரில் தான் கடைசியாய் வந்து தணியும்.
Labels: அன்புடன் சுடர் , எண்ணத்துணுக்கு
அன்புடன் சுடர் என்னிடம்-3
3. மகள், மனைவி, தாய், தோழி – என்ற வெவ்வேறு நிலைகளில் பெண்மையின் உன்னதம் எந்த நிலையில் உயர்வையும் மன நிம்மதியையும் அடைகிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ?
உண்மையில் என்னை மிகவும் யோசிக்க வைத்தது இந்த வினா…….. பெண்மையின் உன்னதம் உயர்வும் நிம்மதியும் ,இந்த நிலைகளை அடைவதில் அல்ல இந்த நிலைகளில் ஒரு பெண்ணின் மனோபாவம் பொறுத்தே நிர்ணயிக்கப் படுகிறது என்பது என் அபிப்பிராயம்.
சுயநலமற்ற நேசம்……
உள்ளார்ந்த அன்பு……..
தலைகோதி நெஞ்சின் சிடுக்கெடுக்கும் விரல் நுனிகள்…. இதயம் உடைந்து விம்மும் வேளைகளில் ஆறுதல் பனித் துளிகள் ……
பிழை செய்தால் அன்பு கலந்த கண்டிப்பு…..
எப்போதும் எரிக்காத பார்வை…………
இவை ஒரு பெண்ணின் மனவெளியில் உலவும் வரை அவள் பெண்மையின் உன்னதம் வான் தொடும்.
நிம்மதியின் ஊற்று கரை உடைக்கும். `ஆண் பெண் சமத்துவம்`இன்று நிறமிழந்து பெண் தன் மணமிழந்து நிற்கிறாள்…
கூட்டுக்கும் கூண்டுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொண்டாலே போதும்……………………
பெண்ணின் மென்மை கலந்த மேன்மை உயிர் சிலிர்க்கும்!
பொத்தி வளர்க்கும் ஒரு மகளின் அலை புரளும் பாசம்……….
உயிர் வேரில் ஒவியமாய் சிலிர்க்கும் மனைவியின் மென்காதல்…………
மனம் வலிக்கும் பொழுதுகளில் தலைதடவி தாலாட்டும் தாயின் நேசம்…….
தொடாத தூரத்திலிருந்தாலும் சுவாசத்துடிப்பறிந்த தோழியின் நட்பு……… ஒவ்வொன்றுமே பெண்மையின் உன்னதம் தான்………………..
பெண்ணின் மனோபாவமும்,அன்பின் ஆளுகையும் தான் அதனைத் தீர்மானிக்கும்.
Labels: அன்புடன் சுடர் , எண்ணத்துணுக்கு
அன்புடன் சுடர் என்னிடம்-2
விதி என்பது என்ன?
இறைவனின் நாட்டமும் மனிதனின் முயற்சியும் சந்திக்கும் தொடுபுள்ளி .
விதிக்கு ஒவ்வொரு விதமான விளக்கங்கள் இருந்தாலும் விதியைக் காரணம் காட்டி உழைப்பையும் உற்சாகத்தையும் இழப்பதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாது.
இறைவனுடைய நாட்டம் ஏற்கனவே எழுதப்பட்டு விட்டது உண்மை தான்:அந்த ஏட்டில் இருப்பது என்ன என்பது எமக்குத்தெரியாது……………
எனவே
உழைக்கும் போது நம் கை மட்டுமே நமக்குப் பலன் தரும் என்பது போல வியர்வை சிந்த வேண்டும்……….
மனதில் உழைப்பைப் பற்றி நினைக்கும் போது நம் வெற்றிக்கு இறைவன் நாட்டமேயன்றி வேறு காரணம் இல்லை என்ற பணிவும் சார்தலும் வேண்டும்.
உளம் தளராத உறுதியின் இரகசியம் இது என்பது என் கருத்து.
இன்னுமொன்று………
நேற்று நடந்ததை நம் அறிவு விளங்கி வைக்கும்.
நாளை நடப்பது எமது அறிவுக்கு அப்பாற்பட்டது.
ஆனால் இறைவன் நேற்றையும் நாளையையும் ஒரே போல் அறிகிறான்.
இது தான் விதியின் அடிப்படை.
நாளை நடப்பதை அறிந்து கொள்ள சோதிடர் தேடி அலைவதிலும்
தினசரிப் பத்திரிகையில் ராசிபலன் பார்ப்பதிலும் எனக்கு உடன்பாடில்லை.
நாளை நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கைப் பூவுடன் நடப்போம்.
Labels: அன்புடன் சுடர் , எண்ணத்துணுக்கு
அன்புடன் சுடர் என்னிடம் 1
1. பெண்ணாகப் பிறந்துவிட்டோமே என்று இந்த சமூகம் என்றாவது உங்களை நினைக்கவைத்திருக்கிறதா ?
அருமையான பதில்களால் எங்கள் உளம் தொட்டு பின் சிந்தனைச் சிறகுகளை அகலவிரித்துப் பறக்க வானம் தரும் உங்கள் கேள்விகள் என் கதவு தட்டுகின்றன. நன்றிகள் சகோதரர் ஷாஜஹானுக்கு!!!
இறைவனுக்கே புகழனைத்தும்.
பெண் குழந்தைகளை விரும்பி வளர்க்கும் ஒரு பெற்றோருக்கு நான் பிறந்தது என் பாக்கியம். சூழலில் வேறு பெண்குழந்தைகளுக்கு பாரபட்சம் காட்டப்படுவதைக் கண்டு கொண்டே நான் வளர்ந்தேன். எனக்கு சகோதரர்கள் இல்லை: சகோதரிகள் மாத்திரம் தான். எப்போதாவது ` நான் ஏன் பெண்ணாய்ப் பிறந்தேன்`என்ற ஆதங்கம் என் உள்ளம் குடைந்ததில்லை. ஒரு ஆணைப் போல் ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டதுமில்லை. இந்த விடயத்தில் என் பெற்றோரின் பரந்த மனோபாவத்திற்கு நான் நன்றிசொல்லியே ஆக வேண்டும்
ஒரு விடயம் சொல்லியாக வேண்டும். 1400 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்மையின் குளிர்ச்சிக்கு தனிதுவமான இடமும் உரிமையும் வழங்கிய உயர் மார்க்கத்தின் வாரிசான பெண் நான். இறைவனுக்கு மட்டுமே அடிபணிவதன் இன்பத்தின் பின்னால் அத்தனை தளைகளும் அடிமைத்தனங்களும் அறுந்து விழுகின்றன. பெண்ணாய்ப் பிறந்ததற்காய் உளம் சிலிர்த்த கணங்களே அதிகம்.
கொள்கையைச் சரியாகப் புரியாமல் குருட்டு வெளிச்சத்தில் குளிர்காயும் சமூகத்தின் ஒரு பகுதியால் நான் காயப்பட்ட உண்மையை நான் மறுக்கவில்லை. பெண் என்பதற்காய் என் பின்னால் அறைந்து சாத்தப்பட்ட கதவுகளின் சத்தம் என்காதுகளில் இன்னுமே ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.
பெண் என்பதால் என் எழுத்தும் வாழ்க்கையும் இணைத்துப் பார்க்கப் படும் துக்கத்தை அனுபவித்திருக்கிறேன்……….
தன் உள்ளத்தின் ஓசைகளைத் தெளிவாக முன்வைக்கும் பெண் ,அமைதியும் மென்மையும் கொண்ட குடும்ப விளக்காக இருக்க பொருத்தமற்றவள் என்ற மனோபாவம் கண்டு வெதும்பியிருக்கிறேன்.
பெண்ணாய் ஏன் பிறந்தோமோ என்று உடைந்து போனதில்லை
இஸ்லாமிய வரலாற்றின் சாதனை மகளிரை, அறிவின் ஊற்று அன்னை ஆயிஷாவை, வீரத்தாய்உம்மு அமாராவை, எகிப்தியப் போராளி சைனப் கஸ்ஸாலியை பாராட்டும் சமூகம்,அதே பணியை முன்னெடுக்கும் தன் நிகழ்காலச் சகோதரியை வேற்றுக்கண் கொண்டு பார்க்கும் அதிர்வு எனக்குள் பதிவாகியிருக்கிறது.
அன்புடன் போட்டிக்கு அனுப்பிய என் இயல் கவிதை என் மன உணர்வுகளின்கண்ணாடி.
முதிர்ந்த இலைகள்
நிலா காயும்
என்
தாகம்!தாகம்!
முளையாய்அரும்ப
தூரத்தில் அசையும்
ஒளிர்ந்து
இருளின் மடியிலும்
ஒழுங்கையோ
முள்பட்டே
ரணங்களின் அந்தரங்கத்தில்
ஆண் அல்ல
திறமை வெள்ளத்தின்
பிரார்த்தனை விழிகளின்
வானம் தொட்டு
அழுத்தும் சுமைகள்
எத்தனை இருந்தும்……………….பெண்ணாய் ஏன் பிறந்தோமோ என்று உடைந்து போனதில்லை.
Labels: அன்புடன் சுடர் , எண்ணத்துணுக்கு
